8 மாவட்டங்களில் கனமழை.. நாளை பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்.. குடை, ரெயின் கோட் எடுத்துக்கோங்க!
சென்னை: தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை பள்ளி மாணவர்களுக்கு மழையின் அளவை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழை பெய்யவில்லை என்றாலும், மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றுடன் பள்ளிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அண்மையில் டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக அரையாண்டு தேர்வு நெருங்கிவிட்ட சூழலில், பள்ளிகளுக்கு மழையால் தொடர்ந்து விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டன. தற்போது டிட்வா புயல் வலுவிழந்த சூழலில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மட்டும் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 9 முதல் 13 வரை மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 முதல் 13 வரை தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டௌள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இரவு முழுக்க தொடரும் பட்சத்தில், நாளை இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் அளவை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இல்லையென்றால், மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட்டுடன் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications