அடுத்த 2 மணி நேரம்.. சென்னை + 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. இடி மின்னலுடன் கனமழை வெளுக்க போகுது
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதேபோன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், இன்று அப்படியே கிளைமேட் மாறியது. அனலாக கொதித்த தமிழகம் இன்று அப்படியே ஜில்லென மாறியது. தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே மழை கொட்ட ஆரம்பித்தது. தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலையில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்தது. தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

சென்னை ஆரஞ்சு நிற எச்சரிக்கை
இதேபோன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்தது. தலைநகர் சென்னையில் மதிய நேரத்தில் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பூந்தமல்லி, ஈக்காட்டுதாங்கல், மாங்காடு, குன்றத்தூர், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் என 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்
இதேபோன்று ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வரும் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (11-03-2025) தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 17 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications