அடுத்த 1 மணி நேரத்தில்.. 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நேற்றும் இதே நேரத்தில் தமிழகத்தின் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது நினைவிருக்கலாம். இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கி வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வெயிலால் ஏசி இல்லாமல் வீட்டுக்குள்ளே கூட இருக்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்து வந்தது. மே மாதம் தொடங்குவதற்கு முன்பே இப்படி வெயில் கொளுத்துகிறதே என்று மக்களும் அச்சமடைந்து வந்தனர்.

கொளுத்தி எடுத்த மழை
ஆனால் மக்களுக்கு அவ்வப்போது மழை பெய்து ஜில் செய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி தான் நேற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது..
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று மாலை 4 மணியளவில் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோன்று பலத்த காற்றும் வீசியதால் மரக்கிளைகள், மின்கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன. இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மதுரை, விருதுநகர், சிவகங்கை
இது தொடர்பாக வெளியான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது, இன்று மாலை 4 மணி வரை குமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று இன்று மாலை 4 மணி வரை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி என 5 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மழையின் காரணமாக ஒருசில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் போக்குவரத்து பாதிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மே 2 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 26 ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை 27 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-04-2025 முதல் 02-05-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வெயில் கொளுத்தும்?
சென்னையை பொறுத்தவரை இன்று (26-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (27-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications