நான் ஸ்டாப்பாக கொட்டித் தீர்க்கும் கனமழை.. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் சரவெடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பாதிகளில் ஒரிக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது.
அதன்படி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்றும் மழை பெய்தது. தொடர்ந்து இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டியது. திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் 33 செ.மீ மழை பதிவானது. கயத்தாறு, எட்டயபுரம் பகுதிகளில் இன்றும் சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
மேலும், நெல்லை மாவட்டத்தின் தென் பகுதிகள் உட்பட பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தபோதும், மழை பெரிய அளவில் பெய்யாமல் இருந்து வந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications