தென் மாவட்டங்களில் தொடரும் கன மழை.. அணைகளில் உயரும் நீர்மட்டம்.. விவசாயிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் தொடர் மழையால் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குறிப்பாக, 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக 6,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து உள்ளதால், சுமார் 15 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 89 அடியாக இருந்த நிலையில், மேலும் சுமார் 4 அடி உயர்ந்து, இன்று 92.75 அடியை எட்டியது. மேலும், பாபநாசம் அணை பகுதிகளில் 8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 107.61 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 3247 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், சேர்வாறு அணை பகுதிகளில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. 52 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 28.75 அடி நீர் இருப்பு உள்ளது.
தொடர் விடுமுறை என்பதால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கன்னிமாரா தோப்பு ஓடையில் குளிக்க இன்று காலை வந்தனர். ஆனால், தொடர் சாரல் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய கனமழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. நாகர்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், தோவாளை, செண்பகராமன் புதூர், திட்டிவிளை சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை கொட்டியது. தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல் பகுதிகளிலும் இடைவிடாமல் மழை தொடர்ந்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
இடி, மின்னலுடன் கொட்டிய பலத்த மழையால் காலை நேரத்திலும் இரவு போன்று காட்சியளித்தது. இதனால் வேளைக்கு செல்பவர்கள், விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உருவானது. பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கீரிப்பாரை பகுதியில் உள்ள அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.
மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 48 அடி உயரமுள்ள பேச்சிப்பாறை நீர்மட்டம் புதன்கிழமை 30 அடியை தாண்டியது. அணைக்கு விநாடிக்கு 2,127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதையடுத்து அணையில் இருந்து 331 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது. மழை வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையிலும் கனமழையை எதிர்கொள்ளும் வகையிலும் தீயணைப்புத் துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் தண்ணீர் பஞ்சம் வருமோ என்று குமரி மாவட்ட மக்கள் அச்சமடைந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளில் தண்ணிர் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications