அதி கனமழை.. ஒத்துழைப்பு கொடுங்கள்.. மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: அதி கனமழையால் அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதி கனமழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு மீட்புப் பணிகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் மீட்புப் பணிகளை முன்னெடுக்க அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் விரைந்துள்ளன.
இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய வானிலை ஆய்வு மையம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதி கனமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில். மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி - சு. நாகராஜன், நில நிர்வாக ஆணையர்.
திருநெல்வேலி - இரா. செல்வராஜ், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
தூத்துக்குடி - பா.ஜோதி நிர்மலா, அரசு செயலாளர், வணிகவரித் துறை
தென்காசி - சுன்சோங்கம் ஜதக் சிரு, அரசு செயலாளர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை
உதவி எண்கள், மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070, வாட்ஸ் அப் எண். - 94458 69848, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் 1077 ஆகும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் அதி கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த IAS அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளேன். அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications