பள்ளிகளுக்கு லீவ்! அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு குறித்து கல்வி அலுவலர்களே முடிவு.. பள்ளி கல்வித்துறை
சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரையாண்டு தேர்வை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தொடர்ந்து 18 மணி நேரத்தை கடந்து நிற்காமல் பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடியே அதிகாலை முதலே மழை நிற்காமல் பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் மட்டுமின்றி மேடான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஒருசில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

தொடர்ந்து மழை நிற்காமல் பெய்துவருவதால் 4 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை இரவு வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதன் காரணமாக மேற்கண்ட 6 மாவட்ட மாணவர்ளால் நாளை நடைபெறும் அரையாண்டு தேர்வை எழுத முடியாது. எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications