தென்மேற்கு பருவமழையில் விட்டதை பிடித்த தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள்! இன்றும் பிச்சி எடுக்குமாம்!
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று இரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் மழை கொட்டியதை போல் இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகிறார்கள். நேற்று பெய்த மழையின் காயல்பட்டினத்தில் 93 மி.மீ., பாளையம்கோட்டையில் 84 மி.மீ மழை பெய்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் திடீரென மழை பெய்தது. தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

நெல்லை மாவட்டத்திலும் மழை பெய்ததால் அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது.
நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இரவில் மழை தொடர்ந்து பெய்தது. நள்ளிரவு வரையிலும் விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுக்க இடி, மின்னலுடன் மழை பெய்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை அந்த அளவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் நேற்று பெய்த இந்த மழைக்கு காரணம் இலங்கை கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என சொல்கிறார்கள்.
நேற்று பெய்த மழையில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 93 மி.மீ. மழை பெய்தது. பாளையம்கோட்டையில் 84 மி.மீ. மழை பெய்தது. இன்று இலங்கை கடற்கரையில் அதிக அளவு மேகக் கூட்டங்கள் இருக்கின்றன. அதனால் இன்றும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications