கொடைக்கானலில் வெளுத்து வாங்கும் கனமழை.. 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அங்கு இன்றைக்கு 75% மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 1 மைல் வேகத்தில் வட திசையில் இருந்து காற்று வீசுவதாக வானிலை அறிவிப்புகள் கூறுகின்றன. இந்த சூழலில் கனமழை காரணமாக கொடைக்கானல் தாலுகாவில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
கொடைக்கானலில் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது கனமழை பெய்துகொண்டிருப்பதன் காரணமாக மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதேநேரம் கனமழை காரணமாக சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் அறையை விட்டு வெளியேற முடியாமல், அறைக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த வாரம் ஓணம் பண்டிகை, மிலாடிநபி தினம் மற்றும் வாரஇறுதி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் விடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தோடு படையெடுத்து வந்தார்கள்.
இதன் காரணமாக கொடைக்கானலில் கடந்த ஞாயிறு அன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. அந்த வகையில் கடந்த வார இறுதியில் கிளைமேட் இதமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்த்தனர்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. கனமழை வெளுத்து வாங்கி வருகிறது . இதனால் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதையடுத்து கொடைக்கானல் தாலுகாவில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், கொடைக்கானல் தாலுகாவில் கனமழை நீடித்து வருவதன் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. 6 முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நடைபெறுவதால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications