சார்ஜ் எடுக்க போகும் வானிலை.. சென்னையை நோக்கி வரும் "குளிர் அலை".. தரமா தாக்க போகுது.. வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வந்தது. இப்போது பருவமழை முடிவுக்கு வரும் சூழலில் குளிர் ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே அடுத்த வாரம் சென்னை உட்படத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடும் குளிர் நிலவும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை கொட்டியது. சென்னை உட்பட பல வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. மாநிலத்தில் பல நீர்நிலைகளில் இப்போது நீர் அளவு சிறப்பாகவே இருக்கிறது.

பருவமழை ஓவர்
இப்போது பருவமழை முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பல இடங்களில் மெல்லக் குளிர் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே செல்கிறார்கள். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பம் மிகக் குறைவாக ஒரு ரம்மியமான சூழல் உருவாகி இருக்கிறது.
வெதர்மேன்
இதற்கிடையே அடுத்த வாரம் சென்னை உட்பட வட தமிழகத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "டிசம்பர் 12ஆம் தேதி வாக்கில் உயர் அழுத்த (வறண்ட காற்று) மண்டலம் உருவாகும். இது மத்திய இந்தியாவில் ஒரு சிறிய குளிர் அலை போன்ற சூழ்நிலையை உருவாக்கும். இதன் தாக்கம் சென்னை மற்றும் வட தமிழகத்திலும் காணப்படும்.
கடும் குளிர்
இந்த காலகட்டத்தில், பெங்களூர்- ஓசூர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10-12°C ஆக குறையும். ஊட்டி, கொடைக்கானலில் 5°C-க்கும் கீழாக வெப்பநிலை செல்லும். வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோவை, தருமபுரியில் வறண்ட குளிர் நிலவும். அதேநேரம் மேற்குக் கடற்கரை நகரங்களில் வழக்கமாக நிலவும் கிளைமேட்டிற்கு நேர்மாறாக அதிக வெப்பம் பதிவாகும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னை உட்பட வடதமிழகத்தில் எப்போதும் டிசம்பர் மாதம் நல்ல மழை இருக்கும். டிசம்பர் பிற்பகுதியில் குளிர் ஆரம்பிக்கும். அதன்படியே இந்தாண்டும் குளிர் காலம் ஆரம்பிக்கிறது. அதற்கு நடுவே எதாவது மழை பொழிவு இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் தினம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "கிழக்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் டிசம்பர் 10 முதல் 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றைய தினம் (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications