"வெளியவே வராதீங்க.." இரண்டு நாட்கள் வெயில் உச்சத்தில் இருக்கும்! எங்கே வெப்பம் அதிகமா இருக்கும்
சென்னை: கோடைக் காலம் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் அலர்ட் வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் பெய்த பருவமழை காலத்தில் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. தென்தமிழகம், வடதமிழகம் என அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்த நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான நீர் நிலைகள் கணிசமாக நிரம்பி உள்ளது.

பருவமழை முடிந்தது முதலே தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. பொதுவாக மார்ச் இறுதியில் தான் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால், இந்த முறை பிப். இறுதியிலேயே வெப்பம் சதமடிக்க ஆரம்பித்துவிட்டது.
அதீத வெப்பம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகி இருக்கிறது. அங்கே ஒரே நாளில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், கரூர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, தர்மபுரி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.
இதற்கிடையே வரும் காலங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தினசரி செய்திக்குறிப்பில், "05.03.2024 முதல் 11.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இரண்டு நாள் அலர்ட்: இன்று ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை: மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியதாகவும் பெரிதாக எங்கும் மழை பெய்யவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் எதுவுமில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications