இமாச்சல்: பெருமழை- பியாஸ்நதியின் வரலாறு காணாத வெள்ளம்- 765 சாலைகள் மூடல்! 30,000 வீடுகள் மூழ்கின!
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு மற்றும் பெருமழை வெள்ளம் காரணமாக சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலை உட்பட 765 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் பியாஸ் நதியில் வரலாறு காணாத பெருவெள்ளம் கோரத்தாண்டவமாடுவதால் 30,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுவிட்டன.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு மற்றும் பருவழமை காரணமாக வரலாறு காணாத பெருமழை பெய்து வருகிறது. இப்பெருமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதுவரை இல்லாத வகையில் பியாஸ்நதி கரைபுரண்டோடுகிறது.

பியாஸ்நதி வெள்ளமானது பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை வாரி சுருட்டிச் செல்கிறது. பியாஸ்நதி வெள்ளத்தில் 30,000 வீடுகள் முழ்கி அடித்து செல்லப்பட்டுவிட்டன. இமாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான சாலைகல் ஆறுகளாக உருமாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவை இருந்த சுவடு தெரியாமல் காட்டாறு போல பாய்ந்தோடும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. ரயில்வே பாலங்கள், மேம்பாலங்கள் பெரும்பாலும் இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
சண்டிகர்- மணாலி இடையேயான நெடுஞ்சாலை உள்ளிட்ட இமாச்சல பிரதேசத்தின் 765 சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஒட்டுமொத்தமாக இமாச்சல பிரதேச மாநிலத்தின் போக்குவரத்தும் முடங்கிப் போய் உள்ளது. இம்மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பெருவெள்ளத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் சுக்விந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் மழைவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஐ தாண்டி இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக 9 பேர் இறந்ததாக மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. இம்மாநிலத்தில் மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இதேபோல பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களும் பெருமழை வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநில மழைவெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச அரசு பல்வேறு உதவி எண்களையும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications