எல்லாமே "ஹாட்ஸ்பாட்.." கோவை, நெல்லை கூட இருக்கு! ஆனா சென்னை மட்டும் மிஸ்ஸிங் ஏன்? வெதர்மேன் நறுக்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை வரும் நாட்களிலும் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேநேரம் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் மழைக்கு வாய்ப்பு குறைவு எனக் குறிப்பிட்ட தமிழ்நாடு வெதர்மேன், அதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் நல்ல மழை கொட்டி வருகிறது. குறிப்பாகத் தென்தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழக உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

வெதர்மேன்: இதற்கிடையே இந்த மழை வரும் நாட்களிலும் தொடரும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் என்றும் இதனால் மழை கொட்டும் என்றும் வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நாளை மேல் அடுக்கு சுழற்சி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அமைகிறது. இதனால் இதுவரை மழை பெய்யாத கோவை, திருப்பூர், கரூர், தூத்துக்குடி, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்ய இருக்கிறது.
மிஸ்ஸாகும் பகுதி: சேலம், திண்டுக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற உள்பகுதிகளாக ஹாட் ஸ்பாட்டாக இருக்கும்.. ஆக மொத்தம் பெரும்பாலான மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களில் உள்ளன. இந்த மழையில் கேடிசிசி (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) பகுதியில் உள்ள வடக்கு கடற்கரை பகுதிகள் மட்டும் மிஸ்ஸாகும்.
காற்றின் இந்த பேட்டர்ன் காரணமாக வேலூரில் இருந்து மேகங்கள் சென்னையை நோக்கி நகராது.. மாறாகச் சென்னையில் இருந்து விலகிச் செல்லும். பெங்களூரிலும் மழை தொடங்க இருக்கிறது. மலைப் பிரதேசங்களான கொடைக்கானல், ஏற்காடு, குன்னூர் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் ஒரு கண் இருக்கட்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி பெல்ட்: அதேபோல அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி- நெல்லை பெல்ட்டில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இலங்கையில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகி வருவதால், வரும் நாட்களில் கன்னியாகுமரி தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி பகுதிகளில் நல்ல மழை பெய்யும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஆக. 11ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு முழுக்க கொட்ட போகுது தீவிர கனமழை.. வந்த புது அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை
சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications