மொத்தமாக குழப்பிய பெங்கல் புயல்.. நவ.,26 முதல் நடந்தது என்ன? கணிப்பு தவறி புயலாக மாறியது எப்படி?
சென்னை : ஃபெங்கால் புயல் என்பது வானிலை மையத்துக்கு தொடர்ந்து போக்கு காட்டி வந்தது. இறுதியாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பையும் மீறி இன்று மதியம் ஃபெங்கால் புயல் உருவாகி உள்ள நிலையில் கடந்த 26ம் தேதி முதல் என்ன நடந்தது? கணிப்பை மீறி புயல் உருவானது எப்படி? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக உருவாகி உள்ளது. புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் திடீரென்று இந்த புயல் உருவாகி உள்ளது.

இதற்கு இயற்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் தான் காரணம். இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
முதலில் வலுவிழந்து கரையை கடக்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது புயலாகவே கரையை கடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த புயல் தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 10 கிலோமீட்டர் வேகத்தில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது. இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வானிலை மைய கணிப்புகளில் 'ஃபெங்கல்' புயல் போக்கு காட்டியது தொடர்பான விபரம் வருமாறு: கடந்த 26ம் தேதி வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.27) புயலாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
நவம்பர் 27 ம் தேதி புயலாக உருவாவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த 12 மணிநேத்தில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. பிறகு நேற்று வெளியான வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் இன்று (அதாவது நேற்று) மாலை முதல் நாளை (நவ.29) காலை வரை தற்காலிக புயலாக மாறும் என்று கூறப்பட்டது. அதன்பிறகு நவம்பர் 28 ம் தேதி இரவு 8 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று வெளியான அறிவிப்பில் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வலுவிழக்காமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து போக்கு காட்டி வந்த பெங்கல் புயல் ஒருவழியாக இன்று உருவாகி நாளை மதிய வேளையில் கரையை கடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications