பரபரப்பின் உச்சத்தில் சென்னை வார் ரூம்.. நொடிக்கு நொடி மெசேஜ்! முறையாக பிளான் போட்ட தமிழக அரசு
சென்னை: சென்னையில் நிலவும் கனமழை பாதிப்புகளை கண்காணிக்க வார் ரூம் செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் விதமாக.. நொடிக்கு நொடி பரபரப்போடு வார் ரூம் இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வார் ரூம்: இதற்காக ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது. பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம் என்பதால் இந்த பணிகள் தீவிரமாக நடத்தப்படுவதாக அமைச்சர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்காக 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நொடிக்கு நொடி எந்த ஒரு போன் காலையும் விடாமல் எடுத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இன்று காலைதான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வார் ரூமை பார்வையிட்டார். சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதோடு TamilNadu Alert என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக திட்டமிட்டு.. எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் வார் ரூமில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தண்ணீர் இல்லை: சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் எந்த சுரங்க பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தும் கூட எங்கும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கினாலும் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications