அடுத்த 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. அப்படியே மாறும் தமிழக வெதர்! வானிலை மையம் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டும் இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில்தான் இந்த வெயில் தீவிரமாக இருக்கும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது.

எப்போதுமே வேலூரில்தான் வெயில் அதிகமாக பதிவாகும். ஆனால் இந்த முறை வேலூரைவிட ஈரோட்டில்தான் + கொங்கு மாவட்டம் என வெயில் அதிகமாக பதிவாகியிருந்தது.
இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது சென்னையில் வெயில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் வெயில் பதிவாகி வருகிறது.
நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 41.9 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருந்தது. அதேபோல திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெயில் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் அதிகபட்சமாக நேற்று திருவள்ளூரில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
மற்ற வட மாவட்டங்களான வேலூர் 111, திருத்தணி 108, திருவண்ணாமலை 106, ஈரோட்டில் 105 டிகிரி, சென்னை 104, மதுரை, 104, திருச்சி 103, நாகை 101 டிகிரி ஃபாரான்ஹீட் என வெயில் பதிவாகியிருந்தது.
இந்த சூழலில்தான் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஜூன் தொடக்கத்தில் தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். எனவே அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மே இறுதியில் என கூடுதலாகவே தொடங்கிவிட்டதாலும், இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications