தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு.. தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்! உஷார் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஏற்கெனவே போதுமான மழை பொழிவை கொடுத்துள்ள நிலையில், மழை நீடிக்கும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயலோடு வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. புயல் முடிந்த பின்னர் இன்னும் மழை எட்டி பார்க்கவில்லை. அதே நேரம் அதிகாலையில் கடும் பனி மூட்டம் நீடித்திருக்கிறது. இந்த வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆண்டின் இறுதி நாட்களில் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளில் மீண்டும் கனமழை செய்யும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு, வங்கக்கடல் பகுதியில் நிலவ இருக்கிறது. இது கடல் பகுதியில் மழையை கொடுக்கும். அதேவேளை நிலப்பகுதிக்குள் இந்த நிகழ்வு கடந்து வரும்பொழுதும் மழை இருப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கனித்திருக்கிறது.
ஆண்டின் இறுதி நாட்களான டிசம்பர் 30,31 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் டெல்லடா மாவட்டங்களிலும், தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலும் 2 செ.மீ அளவுக்கு மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அதேபோல 24 முதல் 26ம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், 27 மற்றும் 28ம் தேதியில், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியை பொறுத்த அளவில், 24 மற்றும் 25ம் தேதிகளில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications