21 செ.மீ.க்கும் அதிகமான அதீத கன மழை- நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசிக்கு ரெட் அலர்ட்!
சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 21 செ.மீ-க்கும் அதிகமாக அதீத கனமழை கொட்டும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் நேற்று முதலே கனமழை கொட்டித் தீர்க்கிறது. இன்று காலை முதல் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடாது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இன்று காலை முதல் 12 மணி வரை மட்டும் 12 செ.மீ மழை கொட்டியுள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் காட்டாறு வெள்ளம் போல சாலைகளில் மழை நீர் பெருக்கொடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அணைகள் மிக மிக வேகமாக நிரம்புவதா அதிக அளவிலான உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அருவிகளிலும் ஆர்ப்பரித்து வெள்ளம் கரைபுரண்டோடுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை விடுத்து வருகின்றன. அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளன. மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இந்த 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

#Watch | Heavy rain lashes parts of Kanyakumari, Tamil Nadu pic.twitter.com/kKfkf39Ymd
— DD News (@DDNewslive) December 17, 2023
இந்த 4 மாவட்டங்களிலும் இடைவிடாத அதீத கனமழை கொட்டும் என அடுத்தடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமான அதீதமான கனமழை பெய்யக் கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதேபோல பல தென் மாவட்டங்களில் மிக அதிக கனமழை கொட்டும் எனவும் ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.












Click it and Unblock the Notifications