அடுத்த 3 மணி நேரத்துக்கு அலர்ட்! 17 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. சென்னை வானிலை மையம் வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிக்குள் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ள நிலையில், இது இலங்கை மற்றும் தமிழக கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாக இன்று மற்றும் நாளை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 11, 12, 13, 16,17 ஆகிய 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 13, 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த 3 நாட்களும் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை எச்சரிக்கையை வெளியிட்டது. அதன்படி, இன்று பகல் 1 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை இடி மின்னலுடன் பெய்யும் என்று அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications