9 மணிநேரத்தில் 17.5 செமீ பதிவு.. வேதாரண்யத்தை புரட்டிப்போட்ட மழை.. கோடியக்கரையையும் விடவில்லை
நாகப்பட்டினம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலான ஒன்பதரை மணிநேரத்தில் வேதாரண்யத்தில் மட்டும் 17.5 செமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட தாலுகாக்களில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இதில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணிக்குள்ளான ஒன்பதரை மணிநேரத்தில் வேதாரண்யத்தில் மட்டும் 175.50 மில்லிமீட்டர் (17.5 சென்டிமீட்டர்) மழை பதிவாகி உள்ளது. அதேபோல் கோடியக்கரையில் 134.40 மில்லிமீட்டர் (13.4 சென்டிமீட்டர்) மழையும், தலைஞாயிறுவில் 33.20 மில்லிமீட்டர் (3.3 சென்டிமீட்டர்) மழையும் பதிவாகி உள்ளது.
நாகப்பட்டினத்தில் 30.90 மில்லி மீட்டர் (3.9 சென்டிமீட்டர்), கீழ்வேளூரில் உள்ள திருப்பூண்டியில் 34.80 மில்லி மீட்டர் (3.5 சென்டிமீட்டர்) , வேளாங்கன்னியில் 27.40 மில்லி மீட்டர் (2.7 சென்டிமீட்டர்) மழையும் பதிவாகி உள்ளது. இந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைந்தபட்ச மழை என்பது திருக்குவளையில் பதிவாகி உள்ளது. திருக்குவளையை பொறுத்தமட்டில் இன்று மாலை 6 மணி வரை மொத்தம் 12.80 மில்லி மீட்டர் (1.2 சென்டிமீட்டர்) மழை மட்டுமே பதிவாகி உள்ளது.
இப்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகி இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கால்நடைகளும் இறக்கவில்லை. வீடுகளும் சேதமடையவில்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.












Click it and Unblock the Notifications