வெயில் இருக்கட்டும்.. இந்த மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைதான்! அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு நிலைமை: கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெயில் கடுமையாக இருக்கிறது. 2023ல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் தீவிரமாக இருந்தது. குறிப்பாக கேரளாவில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால், நீர் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. கர்நாடகாவில் முக்கிய அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்தின் மேட்டூருக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.

மழை: தமிழகத்தை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.
அடுத்த 4 நாட்கள்: இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மேலும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்திருக்கிறது. அதேபோல இன்று முதல் ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
வெப்ப அலை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலையில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்கம், சிக்கிமில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு: நாடு முழுவதும் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் தமிழகத்தில் ஈரோடு 8ம் இடம் (108 டிகிரி ஃபாரன்ஹீட்) பிடித்துள்ளது. ஆந்திராவின் அனந்தப்பூர் (111°F) முதலிடத்திலும் ஒடிசாவின் புவனேஸ்வரில் (110°F) 2ம் இடத்திலும் உள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications