வேலையை காட்ட தொடங்கிய ஹாமூன்.. தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹாமூன் புயல் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
நேற்று வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ஹாமூன் என ஈரான் பெயரிட்டுள்ளது. இந்த புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்தது. நேற்று ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 400 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தில் திகாவிலிருந்து 550 கி.மீ. தென்-தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்த ஹாமூன் புயல், ஒடிசாவின் பல்வேறு இடங்களில் மழை பொழிவை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வங்காள விரிகுடாவின் கடலோர மாவட்டங்களாக ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சார், மயூர்பஞ்ச், அங்குல், தேன்கனல், பௌத், கந்தமால், ராயகடா, கோராபுட் மற்றும் மல்கங்கிரி ஆகியப் பகுதிகள் முதல் லேசானது முதல் மிதமான மழையை பெற்றிருக்கிறது. அதேபோல புயல் வங்தேசத்தை நோக்கி நகர்ந்து வருவதால் மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள ஒடிசா மாநில அரசு தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளது.
இந்த புயல் நாளை அதாவது 25ஆம் தேதி வங்க தேசத்தின் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையேயுள்ள இடத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்த அளவில் புயல் காரணமாக, 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 ஆம் எண் வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகளை ஏற்றுவார்கள்.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாக கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். அதே இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும். 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
அதேபோல மழை பொழிவை பொறுத்த அளவில் தமிழகத்தில் அக்டோபர் 24ம்தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது நாகப்பட்டிணத்தில் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications