அக்டோபரில் 'ஹாட்'.. 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை! இந்திய வானிலை மையம் அலர்ட்
சென்னை: இந்தியாவில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த அக்டோபரில் அதிக வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அக்டோபர் மாதத்தின் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் வெப்பநிலை குறித்து, சூழலியலாளர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்தியாவில் அக்டோபர் மாதங்களில் பதிவாகும் இயல்பான வெப்பநிலையை விட, கடந்த 10 ஆண்டுகளாக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதிவான வெயில், கடந்த 123 ஆண்டுகளில் பதிவான வெயிலை விட அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 2015, 2017, 2020, 2024 என 4 முறை அக்டோபரில் வழக்கத்தை விட அதிகமான அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக 21.8 டிகிரி செல்சியஸ்தான் வெயில் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 26.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகம். வெறும் 1.2 டிகரிதானே ப்ரோ என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் உலக அளவில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒருவேளை அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டதை போல மற்ற எல்லா மாதங்களிலும் வெப்பநிலை அதிகரித்து, மொத்தமாக இந்தியாவின் சாராசரி வெப்பநிலை, அதைவிட 1.2 டிகிரி அதிகரித்தால் பேரழிவு ஏற்படும். ஒருபுறம் பெரும் மழையும், அதனால் வெள்ளமும் ஏற்படும். மறுபுறம் கடும் வறட்சியும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். இப்போது வானிலையை முன்கூட்டியே கணிப்பதால் சூறாவளி, புயல் மற்றும் கனமழை உள்ளிட்ட பாதிப்பிலிருந்து ஓரளவு நம்மால் மீள முடிகிறது. ஆனால் வெப்பநிலை உயர்ந்தால் வானிலையை முன்கூட்டியே கணிக்க முடியாது.
அதேபோல கடல் நீர் மட்டம் அதிகமாகும். இது சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட கடலோர நகரங்களை கடுமையாக பாதிக்கும். இப்போது இருக்கும் குடியிருப்பு பகுதிகள் கூட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படலாம். இது பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தவிர வெப்பநிலை உயர்வு புதிய வகையான நோய்களையும் உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், பல்லுயிர் கட்டமைப்பும் சிதையும் என்றும், பல உயிர்கள் இந்த புதிய சூழலுக்கு தங்களை பொருத்திக்கொள்ள முடியாமல் அழியவும் வாய்ப்பு இருக்கிறது.
பயிர்களின் விளைச்சலும் கூட புதிய காலநிலையால் கடுமையாக பாதிக்கப்படும். இது உணவு பஞ்சத்தை உருவாக்கி, உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதானதாக மாறிவிடும் என்றும் சொல்லப்படுகிறது












Click it and Unblock the Notifications