நாளை உருவாகிறது மிக்ஜாம் புயல்.. சென்னையிலிருந்து எங்கே இருக்கிறது காற்றழுத்தம்?
சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகாவுக்கு தண்ணீர் வழங்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பதால் எவ்வளவு தண்ணீர் வேண்டும் என மீம்ஸ்கள் பறக்கின்றன.

அந்த அளவுக்கு நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. இந்த நிலையில் வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தம் உருவானது. அது நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டது. ஆனால் அதில் தாமதம் அடைந்தது.
இதனால் நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. இது நாளை புயலாக மாறும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயல் எங்கு எப்போது கரையை கடக்கும் என்ற கேள்வி எழுந்தது.
அதில் புயலானது சென்னை- மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அதில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதாவது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் இது நாளை மறுநாள் கரையை கடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இது வேகம் குறைந்து டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடக்கிறது.
இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வானிலை மையம் அளித்து செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 630 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை டிசம்பர் 3ஆம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ஆம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக- புதுவை கடலோர பகுதிகளில் நிலவுக் கூடும். பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும்.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications