தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வெளுத்து வாங்க போகுது
சென்னை: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் காலையிலேயே மழை கொட்டி வரும் நிலையில், நீலகிரிக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள வானிலை மையம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. குறிப்பாக நீலகிரியின் அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் 14 செமீ அழை பதிவானது. கோவையின் சின்னக்கல்லாரில் 13 செமீ மழை பதிவாகியது.

நீலகிரிக்கு மிக கனமழை அலர்ட்
கோவை, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோன்று தஞ்சை, குமரி, தென்காசி, நெல்லை, தர்மபுரி, நாகை மாவட்டங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கும், கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவையில் கனமழைக்கு சான்ஸ்
வரும் 17 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
18-06-2025 முதல் 21-06-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று இடி மின்னலுடன்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் 19 ஆம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் 19 ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல்
மத்திய மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் 19 ஆம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், தென்கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்- கோவா- கர்நாடகா- கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலைத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த நாட்களில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications