தமிழகத்தை ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை.. 2 மாவட்டங்களில் நிலைமை ரொம்பவே மோசம்! பாலச்சந்திரன் தகவல்
சென்னை: இப்போது தென்மேற்கு பருவமழை என்ற போதிலும் தமிழகத்தின் வட மேற்கு மாவட்டங்களில் மழை இயல்பை விட மிக குறைவாகவே உள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். .
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அங்கே நிலச்சரிவு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

ஆனால், தென்னிந்தியாவில் அதற்கு நேர்மாறான ஒரே கிளைமேட் தான் இருக்கிறது.. கேரளாவில் பருவமழை காலத்தில் இயல்பைக் காட்டிலும் சுமார் 50% வரை குறைவாகவே மழை பெய்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் மழை குறைவாகவே இருக்கிறது.
மழை: இதற்கிடையே மழை குறைந்துள்ளது குறித்து வானிலை மைய இயக்குநர் கே. பாலச்சந்திரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இணைந்து வேலூரில் பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய பாலச்சந்திரன், "ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ப காற்று வீசும் திசை மாறும்.. காற்றின் போக்கு மட்டுமின்றி, வெப்பம் ஈரப்பதம் என அனைத்தும் மாறும். இது வேளாண்மைக்கும் பயன்படும் என்பதால்.. இது குறித்து நாங்கள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உதவுகிறோம். நாங்கள் தரும் தகவல்களைப் பொறுத்து விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.
மழை குறைந்துள்ளது: தொடர்ந்து தென்மேற்கு பருவமழை குறித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை இயல்பை விட 9 சதவிகிதம் குறைவாகவே பதிவாகியுள்ளது. குறிப்பாக வடமேற்கு மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை இயல்பைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டும் 20%க்கும் குறைவான மழை பெய்துள்ளது.
இப்போது பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இங்கே தமிழ்நாட்டிற்கு மேலே மேகக் கூட்டங்கள் இல்லாத நிலையில், காற்றின் ஈரப்பதம் குறைந்து இருப்பதே இதற்குக் காரணம். இதனால் அதிகபட்ச வெப்பம் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படுகிறது. அதிக வெப்பத்தால் மேகக் கூட்டங்கள் நகரும் போது அவை மோதுவதால் சில நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்..
வானிலை: இப்போது துல்லியமான வானிலை அறிக்கையைக் கொடுத்து வருகிறோம். மேலும், மழை அளவை துல்லியமாகக் கணக்கிடப் பல மாவட்டங்களிலும் தானியங்கி மழை மானி பொருத்தி உள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு 3 அல்லது 6 மணி நேரத்திற்கு ஒரு முறை மழை குறித்த நிலவரங்களை நம்மால் துல்லியமாகக் கணக்கிட முடிகிறது" என்று அவர் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை குறைந்துள்ள போதிலும், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications