"அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!" சென்னையை பாதிக்குமா? வெதர்மேன் பளிச்.. கனமழை எங்கு பெய்யும்
சென்னை: அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், அதனால் எங்கெல்லாம் மழை கிடைக்கும்.. சென்னையை இது பாதிக்குமா என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் ருத்ர தாண்டவம் ஆடி விட்டுச் சென்றுள்ளது. இந்த புயல் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்தே நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரண பகுதிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும். சென்னையில் எப்போது மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதாவது அரபிக் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பாதிப்பு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகம், உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்.
அரேபிக் கடல் பகுதியில் உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளைப் பாதிக்காது என்பதால் இப்பகுதி மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி பற்றிய வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை பார்த்து பீதி அடைய வேண்டாம். அது சென்னையைப் பாதிக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
மழை எங்கே அதிகம்: மேலும், நேற்றைய தினம் மேற்கு மாவட்டங்களில் பெய்த மழை தொடர்பான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 124 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல கோவை ஏர்போர்ட் பகுதியில் 108 மிமீ மழையும், ஈரோடு குண்டேரிப்பள்ளம் பகுதியில் 102 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூரில் பரவலாக மழை பெய்துள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் அவர் வானிலை குறித்து விரிவாக பேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதில் அவர், "சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் சிறிய அளவில் மட்டுமே மழை பெய்யும். அடுத்த 2 வாரங்களில் சென்னையை எந்தவொரு புயலும் தாக்காது.
அடுத்த மழை எப்போது: அடுத்து டிச. 20 முதல் 24 தேதிகளில் தான் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை இருக்கும். அதையும் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. இப்போது நிவாரண பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். புயல் வதந்திகளை நம்ப வேண்டாம்.
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்யும். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களில் மழையைக் கொடுக்கும் வகையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதேபோல திருச்சி பெரம்பலூர், கரூர், டெல்டா பெல்ட் போன்ற உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், வடக்கு உள்மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் குறுகிய கால மழை இருக்கும்.
மழை எங்கே: கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல், குன்னூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கேரளாவிலும் நல்ல இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications