மதுரை மாவட்டத்தில் விடாது பெய்யும் மழை.. ஆட்சியர் கொடுத்த முக்கிய அப்டேட்
மதுரை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மழை குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நேற்று காலை முதல் தற்போதுவரை மதுரையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மதுரையில் பல்வேறு துறை ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளோம்.

கண்காணிப்பு மையம்
மதுரையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 40 மி.மீ மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக கள்ளந்திரி பகுதியில் 70 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும் மெட்டுப்பட்டி, செந்தாம்பட்டி, மதுரை மாநகர் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மதுரை மாநகராட்சி ஆணையாளருடன் இணைந்து ஆய்வு செய்துள்ளோம். தற்போதுவரை மதுரை மாநகரில் 6 இடங்களில் சுவர் விழுந்துள்ளது. இருப்பினும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
பேரையூர் பகுதியில் பாதிக்கப்பட்ட சாலை சரி செய்யப்பட்டுள்ளது. கச்சிக்குட்டி பகுதியில் ஒரு காரின் மீது மரம் விழுந்துள்ளது. மரத்தை அகற்றிவிட்டோம். மாநகரில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளையும் கண்காணித்து வருகிறோம். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் எமர்ஜென்சி மையம் இயங்கி வருகிறது. மாநகராட்சி அலுவலகத்திலும் கண்காணிப்பு மையம் உள்ளது.
தாழ்வான பகுதிகள்
மதுரை மாவட்டத்தில் 22 பகுதிகளில் மழை மானிகள் உள்ளன. கருடர்பாலத்தில் உள்ளிட்ட 18 பகுதிகளில் மதுரை மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்ற சூப்பர் சக்கர் உள்ளிட்ட அதி நவீன மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. வைகை ஆற்றில் 3,000 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேறி வருகிறது. மக்கள் ஆற்றங்கரை பகுதிகளுக்கு எந்த காரணத்துக்காகவும் செல்ல வேண்டாம்.
மதுரையில் 27 இடங்களில் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளை கண்காணிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலையுடன் ஒப்பிடும்போது இரவில் மழை குறைந்துள்ளது. நாளை (இன்று) மழை குறை வாய்ப்புள்ளது. மழையின் அளவை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுவரை நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் கவலைப்பட வேண்டாம்." என்றார்.












Click it and Unblock the Notifications