நாட்டிலேயே உச்சபட்சமாக மதுரையில் கொளுத்திய வெயில்.. 106 டிகிரி பதிவு.. 13 இடங்களில் வெயில் சதம்!
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் உக்கிரம் காட்ட தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் இன்று 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்திலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளது. வெளியில் சென்றாலே வியர்த்து கொட்டும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. கோடைக்காலம் தான், திரும்பவும் வந்துவிட்டதோ என்று சொல்லும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

சுட்டெரித்த வெயில்
மாலை நேரங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தாலும், மதியம் நேரங்களில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. இப்படி இருக்கையில் வானிலை ஆய்வு மையமும் வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரும் என்றே கணித்துள்ளது. அதாவது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு சில இடங்களில் வெயிலால் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதமடித்து இருக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் வெயில் அளவு அதிகமாக பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 105.8 டிகிரி வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாகத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர்.
வெயில் அளவு:
* மதுரை விமான நிலையம் - 105.8 டிகிரி
* மதுரை நகரம் - 103.64 டிகிரி
* சென்னை மீனம்பாக்கம் - 103.46 டிகிரி
* வேலூர் - 102.38 டிகிரி
* தூத்துக்குடி - 102.2 டிகிரி
* நாகப்பட்டினம் - 102.2 டிகிரி
* ஈரோடு - 101.48 டிகிரி
* திருச்சி - 101.3 டிகிரி
* சென்னை நுங்கம்பாக்கம் - 101.12 டிகிரி
* கடலூர் - 101.12 டிகிரி
* கரூர் - 100.4 டிகிரி
* தஞ்சாவூர் - 100.4 டிகிரி
* பாளையங்கோட்டை - 100.22 டிகிரி
அதிகபட்ச வெப்பநிலை:
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று தொடங்கி ஜூலை.11ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: இன்று தொடங்கி ஜூலை.11ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இந்த தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
அடுத்த ஒரு வாரத்திற்கு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிகு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை.11 முதல் 15 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று, நாளை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (09-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (10-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications