"திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம்.." வரலாறு காணாத மழை! திணறும் தெலுங்கானா.. எந்தளவுக்கு நிலைமை மோசம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், அங்குப் பாதிப்புகள் ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டிய கனமழை அப்பகுதி மக்களைக் கடுமையாகப் பாதித்தது.
கடந்த வாரம் முன்பு வரை வடமாநிலங்களில் மட்டுமே கொட்டி வந்த கனமழை இப்போது தென்மாநிலங்கள் பக்கமும் திரும்பி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தெலுங்கானாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

கொட்டும் கனமழை: இதனால் தெலுங்கானாவில் பல இடங்களில் மிக மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இந்த கனமழையால் தெலங்கானா மாநிலத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் மாயமடைந்துள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு தெலுங்கானாவில் கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 100+ கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்கு மின் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 600 மிமீ அதிகமான மழை கொட்டி தீர்த்தது. இதற்கிடையே இன்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயிரிழப்பு: மேலும், அங்குப் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட முலுகு மாவட்டத்தில் மட்டும் 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை தான் மீட்கப்பட்டன. தெலுங்கானாவில் ஹனம்கொண்டா மற்றும் கம்மம் மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மஹபூபாபாத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அதில் ரூ.25,000 உடனடியாக வழங்கப்படும் என்றும் அம்மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோர் அறிவித்துள்ளார். இது தவிர பல்வேறு இடங்களில் 10 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வாரங்கல் மற்றும் ஹனம்கொண்டா பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் மோட்டார் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை: கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநிலத் தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். உயிரிழப்புகள் அதிகரிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களைப் பாராட்டிய அவர், நோய்க் கிருமிகள் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பொதுமக்கள் மீட்பு: ஏற்கனவே, அங்குக் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கண்காணிப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications