டமால் டுமீல்.. மதுரை பகுதியில் வெளுத்தெடுக்கும் மழை.. இப்போ விடாதாம்! 36 மாவட்டங்களுக்கு வார்னிங்!
சென்னை: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய மழை இன்னும் தொடர்வதால் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. மேலும், 11 மணி வரை பல மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று இரவு 31 மாவட்டகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாலை மற்றும் இரவு நேரத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
அதேபோல, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடியே, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இன்று மாலை 6.30 மணியளவில் இடியுடன் பெய்யத் தொடங்கிய மழை, மேலும் மேலும் தீவிரமடைந்து தற்போதும் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. நீண்டநேரமாக மழை கொட்டி வருவதால், அலுவலகங்களில் இருந்தும், வேலை முடிந்தும் வீடு திரும்பும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருச்சி நாமக்கல், தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 11.10 மணி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட 36 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து, நாளையும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications