மழை விட்டாலும் கடைகள் திறக்கலயே.. அத்தியாவசிய பொருட்கள் ஸ்டாக் இல்லை.. அல்லல்படும் சென்னை மக்கள்!
சென்னை: மழை ஓய்ந்து, மழைநீர் வற்றத் தொடங்கினாலும், பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் ஸ்டாக் இல்லாததால், பால், பிஸ்கட், பிரெட் போன்றவற்றை வாங்க அலையும் நிலை ஏற்பட்டுள்ளது,
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. அதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.

கனமழை கொட்டிதீர்த்த நிலையில், போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சென்னையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மிக்ஜாம் புயல் ஆந்திரா நோக்கிச் சென்ற நிலையில், சென்னையில் மழை ஓய்ந்துள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மழை நேற்று நள்ளிரவு முதல் நின்ற நிலையில் படிப்படியாக ஒவ்வொரு பகுதிகளாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்ற கனமழை காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இன்று காலை சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. எனினும், பள்ளமான இடங்களில், இன்னும் மழைநீர் முழுவதுமாக வடியவில்லை. தேங்கியுள்ள மழைநீரை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால், பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. ஒன்றிரண்டு டீக்கடைகள், சிறிய மளிகை கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும், அங்கும், பால், பிஸ்கட், பிரெட் போன்ற பொருட்கள் ஸ்டாக் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. சில கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே ஸ்டாக் இல்லை என்பதால், வெறும் கையோடு மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications