மிக்ஜாமுக்கு இடையே மிரட்டும் கடல் அலைகள்.. மெரினா கடற்கரை நுழைவுவாயில் மூடல்!
சென்னை: மிக்ஜாம் புயல் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் நுழைவுவாயில்களை போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கியது. இது தற்போது தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை சீசனில் தமிழகத்தை நெருங்கி செல்லும் முதல் புயல் இந்த மிக்ஜாம் புயல்.

இன்றைய தினம் தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியது. இது நாளை வரை வடதமிழகம்- தெற்கு ஆந்திரா கடலோரத்தில் நிலவக் கூடும். பிறகு நாளை மறுநாள் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே அதிகாலை கரையை கடக்கிறது.
இவ்வாறு கரையை கடக்கும் போது மணிக்கு 60 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். கடலில் மணிக்கு 100 அல்லது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் டிசம்பர் 5ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வடதமிழக கடற்கரை பகுதியை உரசி கொண்டே செல்கிறது.
இதனால் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் மேற்கண்ட 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மட்டும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் சென்னையிலிருந்து 290 கி.மீ. தூரத்தில் இருப்பதால் மெரினா , பட்டினம்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட கடற்பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
எனினும் சிலர் கடற்கரைக்கு சென்று தண்ணீரில் கால்களை நனைத்து விளையாடி ஆபத்தான செயலை செய்து வந்தனர். இந்த நிலையில் மெரினா கடற்கரையின் நுழைவு வாயில்களை போலீஸார் தடுப்புகள் போட்டு மூடியுள்ளனர். மிக்ஜாம் புயல் வடதமிழக கடலோர பகுதியை நோக்கி வருகிறது. இன்று மாலைக்கு மேல் காற்றும் மழையும் அதி தீவிரமாக இருக்கும்.
எனவே மெரினா கடற்கரைக்கு யாரும் வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும் மெரினாவில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீஸார் அப்புறப்படுத்தி வருகிறார்கள். அது போல் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம் சாலை முதல் உழைப்பாளர் சிலை இருக்கும் இடங்கள் வரை உள்ள நுழைவு வாயில்களை மூடியுள்ளனர்.
மேலும் தடுப்புகளை மீறி கடற்கரைக்குள் வருவோரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வருகிறார்கள். மெரினா கடற்கரையில் கடை வைத்திருப்போரையும் வெளியேற்றி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications