ஒரே பனி மூட்டமா இருக்கே .. ஜில்லென்ற குளிரில் நடுங்கும் சென்னை.. வானிலை மையம் சொன்ன அப்டேட்
சென்னை: சென்னையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம், அடுத்த சில நாட்களுக்கு பனி மூட்டம் நீடிக்கும் என அறிவித்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயலோடு வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ முடிவுக்கு வந்ததுவிட்டதாகவே தெரிகிறது. புயல் முடிந்த பின்னர் இன்னும் மழை எட்டி பார்க்கவில்லை. அதே நேரம் அதிகாலையில் கடும் பனி மூட்டம் நீடித்திருக்கிறது. இந்த வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது,

"இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(சனிக்கிழமை) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுகிழமையன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 25 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் தங்கச்சிமடம், நெல்லை ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவானது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் நெல்லை காக்காச்சி, சிவகங்கை பயணியர் விடுதி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை கொட்டியுள்ளது.
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு - லட்சதீவு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications