இன்னைக்கும் நாளைக்கும் வெயிலுக்கு ரெஸ்ட்! சில மாவட்டங்களில் நல்ல மழை இருக்கு! வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: நாடு முழுவதும் கோடை வெயில் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
நேற்று மட்டும் சுமார் 9 நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. அதாவது, ஈரோடு, கரூர் பரமத்தியில் 104 டிகிரி, சேலம், திருச்சி, மதுரை நகர், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 102 டிகிரி, வேலூரில் 101 டிகிரி, தருமபுரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்றும் நாளையும், சில பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, " தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல ஏப்.3ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி வரும் 5ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 2 செ.மீ அளவும், புதுக்கோட்டையின் நாகுடி மற்றும் ராமநாதபுரத்தின் கமதியில் தலா 1 செ.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications