தேர்தல் நாளில் வெப்ப அலை.. தமிழக மக்களே உஷார்! எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: நாளை தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்ப அலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் கூறியுள்ளது.
வட மாவட்டங்கள்: வழக்கமாக மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே கோடை தொடங்கிவிட்டது. எனவே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. ஆனால், தென் மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே தென் மாவட்ட மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். ஆனால் வட மாவட்டங்களில் வெயில் வழக்கத்தைவிட அதிகமாக பதிவாகியிருந்தது.

எச்சரிக்கை: ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி 21ம் தேதி வரை, அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த இரண்டு தினங்களில் சற்றே குறையக்கூடும்.
இன்று: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2* - 3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37-40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34'-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஏப்.18, 19ம் தேதிகளில்: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 3-5. செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°- 41' செல்சியஸ் இருக்கக்கூடும். 20 மற்றும் 21ம் தேதியில் அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் 2° செல்சியஸ் படிப்படியாக குறையக்கூடும்.
வெப்ப அலை: இன்று தொடங்கி 19ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications