அமெரிக்காவை மிரட்டும் அதி தீவிர "மில்டன் புயல்.." விமானங்கள் ரத்து! "ஹை அலர்ட்"டில் புளோரிடா
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புதன்கிழமை இரவு மில்டன் புயல் கரையைக் கடக்க உள்ளது. புளோரிடாவை கடந்த 100 ஆண்டுகளில் தாக்கிய மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது இருக்க கூடும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புயல் அச்சுறுத்தலால் டம்பா விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சக்தி வாய்ந்த அதி தீவிர புயல் தாக்க உள்ளது. மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டம்பா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த மில்டன் புயல், மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அதி தீவிர புயல் இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
புயல் காரணமாக அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும். அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், புயல் கரையைக் கடக்கும்போது புயலின் தீவிரம் சற்று குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை இரவு புளோரிடாவில் இந்த புயல் கரையக் கடக்க உள்ளது.
டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26 ஆம் தேதி ஹெலீன் புயல் தாக்கியது. இந்த புயலால் புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயல் பாதித்த 12 நாட்களில் மீண்டும் அதி திவிர புயல் புளோரிடாவை பதம் பார்க்க உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய கட்ரினா புயலுக்குப் பிறகு மோசமான புயலாக ஹெலீன் புயல் அமைந்தது.












Click it and Unblock the Notifications