வடகிழக்கு பருவமழைக்கு பலி 5.. மிக்ஜம் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார்! அமைச்சர் ராமச்சந்திரன்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி, வரும் 5ம் தேதி சென்னைக்கு அருகே தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? என்பது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 510 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இந்த புயல் வரும் 5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக 5ம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளுர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல புயலை கடக்கும் போது ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், இதற்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, “புயல் மழையால் எந்தெந்த இடங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அந்த இடங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தவிர கூடுதலாக பேரிடர் மீட்ப படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அதேபோல மழையால் 98 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன. மட்டுமல்லாது 450 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் நிலைகள் அதன் முழு கொள்ளளவை எட்டும் போது கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் தான் அதிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இப்படியாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.
குடிசை வீடுகள் பாதிப்பு, மனித உயிர்பலி மற்றும் கால்நடைகள் பலிக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். மின்சார கம்பங்கள், வயர்கள் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புயல் பாதிப்பை எதிர்கொள்வதை பொருத்த அளவில், பாதிப்பு அதிகம் இருக்கும் இடத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளை அங்கேயே தங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications