சொந்த படகுகளை எடுத்து நெல்லைக்கு ஓடி வந்த மீனவர்கள்.. கையெடுத்து கும்பிட்ட தங்கம் தென்னரசு
நெல்லை: திருநெல்வேலிக்கு விரைந்து வந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு உதவிகரமாக இருந்த பிற தாலுகாக்களை சேர்ந்த மீனவர்களை கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
திருநெல்வேலி மாவட்டத்தின், உவரி, கூட்டப்பனை, கூத்தன்குழி உள்ளிட்ட கடலோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், தங்கள் தலைநகரம் நெல்லை வெள்ளத்தில் மிதப்பதை அறிந்ததும் சொந்தமாக செலவு செய்து கொண்டு தங்களது விலை உயர்ந்த கடல் படகுகளுடன் நெல்லைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு தத்தளித்துக் கொண்டு இருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர்.

மத்திய, மாநில மீட்பு படையினரால் முடியாத இடங்களுக்கும் இவர்களால் எளிதாக செல்ல முடிந்தது. புயலுடன் கூடிய அலை கடலுக்கு மத்தியிலும் திறமையாக மீன்பிடித்து வரும் வித்தகர்களான மீனவர்களுக்கு, நெல்லை வெள்ளம் கிஞ்சித்தும் அச்சம் ஏற்படுத்தவில்லை என்பது இதற்கு காரணம்.
இந்த நிலையில் இன்று, திருநெல்வேலியில் வைத்து மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர்களை நோக்கி அவர் கையெடுத்து கும்பிட்டார். தங்கள் தொழிலை விட்டுவிட்டு திருநெல்வேலியில் வந்திருந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு லாரிகள் மூலம் படகுகளை எடுத்து செல்வதற்கு அரசு உரிய ஆவண செய்யும் என்று அவர் உறுதி அளித்தார்.













Click it and Unblock the Notifications