கொட்டும் மழைக்கு இடையே.. இரவில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: கனமழைக்கு இடையே இரவு நேரத்திலும் திருவல்லிக்கேணி பிவி ராமன் சாலையில் மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வினை மேற்கொண்டார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி வருகிறது. நாள் முழுக்க விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இரவு முதல் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கடுத்து ஓடுகிறது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தமிழக அரசும் அனைத்து முன்னேற்பாடுகளையும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளது. மழை நீர் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனுக்கு உடன் தீர்வு காணவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார்.
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மையத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வரிடம் எடுத்து கூறினார். தொடர்ந்து, மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு மாவட்ட கலெக்டர்களிடம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், தேவைப்படக்கூடிய அனைத்து இடங்களிலும், தேவை ஏற்படும் இடங்களில் மட்டுமல்ல, எங்கே பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அங்கே எல்லாம் நிச்சயமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை, மொத்தம் ஆயிரம் மோட்டார் பம்புகளை தயாராக வைத்திருக்கிறோம்" என்றார்.
இதனிடையே, நேற்று இரவு கொட்டும் மழைக்கு மத்தியிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்தார். கனமழைக்கு மத்தியிலும் நேரடியாக தொகுதிக்கே வந்த உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மழை பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணத்தால் சென்னையில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நம்முடைய #ChepaukTriplicane தொகுதிக்குட்பட்ட அவ்வை சண்முகம் சாலை, ஜானி ஜான்கான் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை சற்று முன் நேரில் ஆய்வு செய்தோம். மழைநீரை விரைவாக வெளியேற்றிடவும் - பாதிப்புகளை தவிர்க்கும் வண்ணம் செயலாற்றிடவும் அதிகாரிகள் - அலுவலர்களை கேட்டுக் கொண்டோம். இவ்வாறு அதில் பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications