சட்டென மாறிய வானிலை.. காலையிலேயே சூழ்ந்த கருமேகங்கள்! சென்னையில் பல இடங்களில் செம மழை! மக்கள் ஹேப்பி
சென்னை: தலைநகர் சென்னையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் இன்று காலை முதலே சில பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை வெயில் கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே கோடை காலம் உச்சத்தில் இருக்கும் இப்போது மாநிலத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவி வருகிறது.
சென்னை கிளைமேட்: சென்னையை பொறுத்தவரை வானிலை மையம் வெளியிடும் அதீத வெப்பம் நிலவிய மாவட்டங்கள் லிஸ்டில் சென்னை வராது. இருப்பினும், சென்னையில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அது வியர்வையை ஆவியாக விடாமல் தடுத்துவிடும். இதனால் மக்கள் நகரில் நிலவும் வெப்பத்தை காட்டிலும் கூடுதல் வெப்பத்தை உணர்வார்கள். சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தாலே அது 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் போல நமக்கு தோன்றும். இதன் காரணமாக சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்ந்து வந்தனர்.
காலை முதலே மழை: இப்போது கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், வானிலை மையம் எச்சரித்தது போலவே இன்று காலை சென்னையிலும் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உட்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. காலையில் இருந்தே கருமேகங்களுடன் வானம் காணப்படுவதால் குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவி வருகிறது.
நேற்றிரவும் கூட கோயம்பேடு, பல்லாவரம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.. மேலும், தரமணி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, அடையாறு போன்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் நல்ல மழை பெய்யும் என்றே கூறப்பட்டுள்ளது. சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதால் சாலைகளில் நீர் தேங்கி டிராபிக் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications