அடித்து பெய்யும் மழை! மிதக்கும் மும்பை! 6 மணி நேரத்தில் 300மி.மீ.பதிவு! ரயில், பஸ் சேவை பாதிப்பு
மும்பை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை கொட்டி தீர்த்த நிலையில் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை நகரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அஸ்ஸாமில் கனமழை பெய்து 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த 6 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில் கடந்த சனிக்கிழமை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விடாமல் மழை பெய்து கொண்டே இருப்பதால் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வரும் 10 ஆம் தேதி வரை மழை தொடரும்.

குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் கேரளாவிலும் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் 30 லட்சத்திற்கும் மேலான வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சகிநாகா மெட்ரோவில் ஏராளமான தண்ணீர் சூழ்ந்துள்ளது. அது போல் மும்பை விமான நிலையத்திற்கு செல்ல அந்தேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வழியாக செல்ல வேண்டாம் என நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மும்பை நகரம், மும்பை புறநகர், தானே, பால்கர், ரத்தினகிரி, நாசிக் , ஔரங்கபாத், ஜால்னா, நந்தூர்பார், ஜால்கான், தூலே ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையை மும்பை வானிலை மையம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications