வங்க கடலில் உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்த இடங்களில் மழை இருக்கும்? வானிலை அலர்ட்
சென்னை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யவில்லை. ஆனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடந்து 4 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இன்றும் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. ஒருசில இடங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று (19-11-2024) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை பெய்யும் மாவட்டங்கள்:
இன்று, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-11-2024 முதல் 24-11-2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-11-2024 அன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்படி?:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 21-11-2024: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22-11-2024: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 23-11-2024: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.11.2024: மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு:
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 10, கோடியக்கரை (மயிலாடுதுறை) 9, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 8, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7, செம்பனார்கோயில் பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), நன்னிலம் (திருவாரூர்) தலா 6,
நாகப்பட்டினம் AWS (நாகப்பட்டினம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 5, காரைக்கால் (காரைக்கால்), மதுக்கூர் (தஞ்சாவூர்), கொடவாசல் (திருவாரூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பாண்டவரடி (திருவாரூர்), காரைக்கால் AWS (காரைக்கால்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) தலா 4 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications