சட்டென இடம் மாறிய.. காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழ்நாட்டில் இந்த இடங்களுக்கு குறி.. ஆரஞ்சு அலார்ட்
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் இருப்பிடம் மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடற்பகுதியில் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பின்னர் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தாழ்வுப் பகுதி உருவாகி அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரட்டை வானிலை அமைப்புகளால், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளையும், முக்கிய எச்சரிக்கைகளையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் மற்றும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோரப் பகுதிக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 20 காலை 08:30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நீடிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அக்டோபர் 20, 2025: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 21, 2025: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 22, 2025: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 23, 2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 24, 2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 25, 2025: தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 26, 2025: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அக்டோபர் 20, 2025: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அக்டோபர் 21, 2025: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப் பகுதிகள் (அக்டோபர் 20 முதல் அக்டோபர் 24, 2025 வரை): தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
அக்டோபர் 20, 2025: மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக்டோபர் 21, 2025: தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளது. மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications