கொங்கு + இந்த தென் மாவட்டங்கள்.. அடுத்த 2 மணி நேரம் மழை கொட்டி தீர்க்க போகுது! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில், மாநிலத்தில் கணிசமாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்தே வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு கோடைக் காலத்திலேயே கூட கணிசமாக மழை இருந்தது. சென்னை தொடங்கி மாநிலம் முழுக்கவே மழை பெய்தது. இதற்கிடையே இப்போது மாநிலத்தில் பருவமழையும் தொடங்கிவிட்ட நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பருவமழை
பொதுவாகத் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு காலங்களிலும் மழை இருக்கும். இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். அதேநேரம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சமயத்தில் சென்னை உட்படக் கடலோர மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கும்.
அடுத்த 2 மணி நேரம்
இப்போது தென்மேற்கு பருவமழை என்பதால் கொங்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தே வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதாவது இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வரும் சூழலில், இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவே உள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (16-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications