மழை கொட்டினாலும் சென்னையில் எங்குமே மின்தடை ஏற்படவில்லை.. துணை முதல்வர் உதயநிதி பேட்டி!
சென்னை: "சென்னையில் சராசரியாக 4.6 செமீ மழை பதிவாகியுள்ளது. மழை விட்ட ஒரு மணி நேரத்தில் தேங்கிய நீர் அகற்றப்படுகிறது. சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை." என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை இன்று ஆய்வு செய்தார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர், "சென்னையில் சராசரியாக 4.6 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.
பலத்த காற்று வீசியதால் சென்னையில் 8 மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது வரை ஒரு மரம் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து மரங்களும் அகற்றப்படும். 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இங்கு குடிநீர், பால், பிரட் பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளன.
கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் தவிர சென்னையில் உள்ள 20 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. மழை நின்றவுடன் இவ்விரு சுரங்கப்பாதைகளும் சரிசெய்யப்படும். மழை விட்ட ஒரு மணி நேரத்தில் தேங்கிய நீர் அகற்றப்படுகிறது.
300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை. சென்னையில் 89 படகுகளும் மற்ற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்களும் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications