கொட்டித் தீர்த்த கனமழையிலும்.. சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை.. செம அப்டேட்!
சென்னை: சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கனமழை பெய்த போதிலும், சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அநேக இடங்களில் மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர். அரியலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்க தொடங்கியது. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
சென்னையில் பருவமழையின் தீவிரம் அதிகமாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கூட கொண்டாட விடாமல் மழை பெய்தது. மழை வெள்ளத்தை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், சென்னை நகர போலீசாரையும் உஷார்படுத்தி போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளார். சென்னையில் 12 துணை கமிஷனர்கள் தலைமையில் மழை வெள்ளத்தை சமாளிக்க 12 பேரிடம் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் இந்த பேரிடர் மீட்பு படைகளில் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர சென்னை நகர் முழுவதும் 39 இடங்களில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தென்சென்னையில் மட்டும் 23 சிறப்பு மினி போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தொலைபேசி எண் 100-ல் பேசி உதவி கேட்டால் உடனடியாக மீட்பு படையினர் சென்று உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றும் தென்சென்னை கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கனமழை பெய்த போதிலும், சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications