வடகிழக்குப் பருவமழை லேட்.. ஆனாலும் லேட்டஸ்ட்டாக பெய்யுமாம்.. வானிலை ஆய்வாளர்கள் கூறும் காரணம்
சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்குவது தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வராமல் இருப்பதால் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது தாமதமாகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை காலம், அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரைக்கும் வடகிழக்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டுக்குப் பரவலாக அதிக அளவில் மழைப்பொழிவு கிடைக்கும். ஆனால் அக்டோபர் மாதம் தொடங்கி 14 நாட்கள் ஆன நிலையில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்காமல் உள்ளது. இதற்கு தென்மேற்கு மழை இன்னும் நிற்காமல் பெய்வது தான் காரணமாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த மாதம் 15ம் தேதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கில் வீசத்தொங்கும் காற்று நின்ற பின்னர் வடகிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கிய பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், பொதுவாக, 'தென்மேற்கு பருவமழை தமிழக பகுதியில் விலகி இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வலுப்பெற்று இருக்க வேண்டும்.
தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்திருக்க வேண்டும்' என்பன போன்ற நிகழ்வுகள் அடிப்படையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.
அக்டோபர் 13 முதல் 27ஆம் தேதி வரையிலான நாட்களில் எப்போது பருவமழை தொடங்கினாலும் அது வழக்கமான நாளாகவே கருதப்படும். இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. அதனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக, அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் வழக்கமான நாளாக அக்டோபர் 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சுமார் 10 நாட்கள் தாமதமாக தொடங்கும் என்று தெரிகிறது.
இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி 1977ஆம்ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. 1984ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பருவமழை தொடங்கியுள்ளது. 1988, 1992 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் மிகவும் தாமதமாக நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கமான அளவிலேயே இருக்கும். சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட சற்று குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை எப்போது தொடங்கும், எந்தெந்தப் பகுதிகளில் எவ்வளவு மழை எதிர்பார்க்கலாம், சராசரி மழை இருக்குமோ, அல்லது அதைவிட அதிகமாக இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். தற்போது கிழக்கு திசை காற்று தொடங்கியுள்ளது. அதைவைத்து பருவமழை தொடங்கிவிட்டது என்று கூற முடியாது. வழக்கமாக அக்டோபர் 15 முதல் 25ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு அக்டோபர் 22 முதல் 27க்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள், உள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளன. அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் அக்டோபர் மாதம் பெய்யும் மழை அனைத்தும் வடகிழக்கு பருவமழை கணக்கில் தான் சேரும். அக்டோபர் மாத மழையைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் இயல்பை விட சற்று குறைவாக உள்ளது. தென் மாவட்டங்கள், உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் சராசரியை விட அதிகமாகவும் உள்ளது.
22ஆம் தேதிக்குப் பிறகு கடலோர மாவட்டங்களில் மழை பெய்த பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். நவம்பரின் இரண்டாம் வாரத்திலிருந்து டிசம்பர் இரண்டாம் வாரம் வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும்.
இது எல் நினோ ஆண்டு. இதற்கு முன் எல் நினோ ஆண்டு வந்த காலகட்டங்களில் வடகிழக்கு பருவமழை நல்ல மழைப் பொழிவை கொடுத்துள்ளது. மிக சொற்பமாகவே பொய்த்துபோயுள்ளது. 1997, 2015, 2009 ஆகிய எல்நினோ ஆண்டுகளில் சராசரியைவிட அதிகமாக மழை கிடைத்துள்ளது. அதிகபட்சமாக 1997ஆம் ஆண்டு 810 மி.மீ மழை கிடைத்துள்ளது. சராசரியாக 450 மிமீ மழை கிடைக்கும். இந்த ஆண்டு சராசரியைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரு வெள்ளம் சூழ்ந்தது அதை யாராலும் மறக்க முடியாது. தற்போது அதே போல ஒரு நிலை ஏற்படுமா? என்று சென்னைவாசிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications