இது போதாது.. பட்டும் படாமல் போகிறதா வடகிழக்கு பருவமழை? வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், தற்போது வரை பெய்திருக்கும் வடகிழக்கு பருவமழையின் அளவு 16 சதவிகிதம் குறைவுதான் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்த நிலையில், வடமேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை தவிர மற்ற அணைகள் பெரும்பாலும் முழு கொள்ளவை எட்டியுள்ளன. மழை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. ஆனால், தற்போது வரை பெய்த மழையை கணக்கிட்டால், இயல்பை விட 16 சதவிகிதம் குறைவாகத்தான் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. அதேபோல சென்னையை பொறுத்த அளவில் பொதுவாக மிதமான மழை பெய்யும். சில பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. வடகிழக்கு பருவமழையை பொறுத்த அளவில், கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான கால கட்டத்தில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் 25 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது.
இந்த காலகாட்டத்தில் இயல்பான மழையின் அளவு 30 செ.மீ. ஆனால் தற்போது பெய்திருக்கக்கூடிய மழையின் அளவை எடுத்து பார்த்தால் அது இயல்பை விட 16 சதவிகிதம் குறைவாக பெய்திருப்பது தெரிய வந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
மேலும் இன்றைய வானிலையை பொறுத்த அளவில், இன்று (நவ.20) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவ. 21) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22ம் தேதியை பொறுத்த அளவில், அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23ம் தேதியன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications