பொளந்து கட்டுது.. தமிழகத்தில் மழை நீடிக்கும்.. இத்தனை நாட்களா? குஷியில் டெல்டா.. வலுவடைந்தது பருவமழை
சென்னை: புயல்கள் கரை ஒதுங்கி சென்றாலும், தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்க கடலில் 2 நாட்களுக்கு முன்பு, வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத் தீவிர புயல் ஹாமூன் வலுவிழந்து நேற்று முன்தினம் வங்கதேச கடற்கரையின் தெற்கு சிட்டகாங் அருகே கரையை கடந்துவிட்டது.

அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான புயல்களால், வட கிழக்கு பருவமழை ஆரம்பத்தில் வலுக்குறைந்து காணப்பட்ட நிலையில், புயல்கள் கரையை கடந்துவிட்டதால், தற்போது பருவமழை தமிழ்நாட்டில் வலுவடைய தொடங்கியுள்ளது.
கனமழை: அந்தவகையில், வரும் 29ம் தேதிவரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிலும் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது..
குறிப்பாக, வரும் 29ம் தேதி கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிதிருந்தது.
இந்நிலையில், காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 31ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தென் மேற்கு வங்கக் கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
மழை நீடிக்கும்: இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 31ம் தேதி வரையில் மழை தொடர்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்று அறிவித்திருக்கிறது.. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications